Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
பிரகாரம், கொடிக்கம்பம், பலிபீடம், கருவறை என்று ஆகம விதிப்படி அமைந்த ஆலயமல்ல, என்றாலும் ஆத்மார்ந்த விதிப்படி அமைக்கப்பட்டது போல ஜீவகளை சொட்டும் சிறு கோவில். தனிப்பெரும் ஜோதியான அருட்பெரும் ஜோதியே, அங்கே மூன்று பக்கம் மலையாகவும் முன்பக்கம் அருவியாகவும், ஒரு பக்கம் சமவெளிக்கு இட்டுச்செல்லும் மலைச்சரிவுப் பாதை யாகவும், மரம் செடி கொடிகளாகவும், மண்மேல் முகிழ்த்த தாவர சங்கமமாகவும், விண்மேல் முளைத்த வெள்ளிகளாகவும், ஒன்றில் பலதாய், பலதில் ஒன்றாய், தோன்றுவது அறியாத தோற்றங்காட்டி நிற்பது போல, நடப்பதுபோல, நிலையின்றி தாவுதல் போல, ஆட்சி செலுத்துவதாய் தோன்றும். இயல்பாக ஏற்பட்ட அந்த மலைக்குகையில் உள்ள லிங்கம், எப்போது ஸ்தாபிக்கப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது. மாடு, ’ம்மா’ என்று கூப்பிடும்போது எப்படி வாயைத் திறந்து வைத்திருக்குமோ அப்படி இருந்தது அந்தக் குகை. மத்தியில் லிங்கம். குகைவாய் முனையில், கல்லால் செதுக்கப்பட்ட நடராஜர் சிலை லிங்கத்திற்குப் பின்னால், குகையின் பின் புறச் சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் திரிசூலம்; குன்றின் முனைப்பில் நந்தி, ஆவுடையாரை ஒட்டி ஒரு சதுரக்கல். அந்தக் கல்லின் மேல் விபூதி சிதறிய சிறிய தட்டு. இவைதான் கோவிலாகவும், கோவிலைச் சார்ந்த சொத்துக்களாகவும் உருவமானவை.