Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
’எட்டு நாட்கள்! மரணத்துக்கும் அவனுக்கும் இடையே எட்டே நாட்கள் உள்ளன. தண்டனை தந்தாகியிட்டது. அவனைச் சுட்டெரிக்க, மாற்ற முடியாத தண்டனை - வேறு வழக்காடி நீதி கேட்கும் இடமும் கிடையாது - இன்று 1600-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் ஒன்பதாம் நாள் - எட்டு நாட்கள் உள்ளன, தண்டனை நிறைவேற்றப்பட! அவன் விரும்பினால், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். 'ஐயனே! அடிபணிகிறேன், அஞ்ஞானத்தால் நான் உளறிவந்தேன் இதுநாள்வரையில். மெய்ஞ்ஞான போதகரே! என் பிழை பொறுத்திடுக! ’என் பிழை பொறுத்திடுக!’ என்று சொன்னால் போதும், தண்டனை இல்லை, சாவு இல்லை, வாழலாம், சிறப்புறக்கூட வாழலாம்! வரவேற்புகளும் பதவிகளும் வழங்கப்படும்! திருவிழாக் கோலத்துடன் உலவலாம்! பட்டத்தரசர்கள் கட்டித் தழுவிக்கொள்வர் - பாதகாணிக்கைபெறும் குருமார்கள் அன்புமுத்தம் அளிப்பர் - மாளிகைகள் விருந்தளிக்கும்.எட்டே நாட்கள் உள்ளன அவன் ஒரு முடிவுக்கு வர.வாழ்வா? சாவா? என்ற முடிவு - அவனே இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.அவன் கொல்லப்பட வேண்டியவன்தான் என்று, ஆச்சாரியாரும் கூறிவிட்டார், அரச மன்றமும் தீர்ப்பளித்துவிட்டது. எட்டு நாட்கள் தவணை தருகிறோம், என்று தீர்ப்பளித்தோர் கூறிவிட்டனர்.ஆண்டு அனுவித்துவிட்டு, இனி ஆட அனுபவிக்க, இயலாத நிலையில் உள்ள படுகிழமல்ல - உலகம் மாயை, வாழ்வே அநித்யம், இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடமில்லை என்று குளறும், காட்டு வேதாந்தியுமல்ல; வாழ்வா? ஏன்? வாழ்ந்து நான் சாதிக்கவேண்டியது என்ன இருக்கிறது என்று வேகம் குழப்ப நிலையுடையோனுமல்ல, நடுத்தர வயதுடையவன் - உலகுக்கு உண்மையை அளித்தாகவேண்டும் என்ற ஆர்வம் கொழுந்து விட்டெரியும் உள்ளம் படைத்தான் -