Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
தமிழ்நாடு என்றும் முருகனை வழிபடும் தகைமை சான்றது. கோலமாமயில்மீது குலவும் குழகன் என்றும், வேற்படையுடைய விமலன் என்றும், அரந்தை கெடுத்து வரந்தரும் இறைவன் என்றும் அப்பெருமானைப் போற்றுவர், தமிழ் மக்கள். அல்லல் விளைத்த அசுரர் குலத்தை வேரறுத்த, அறத்தினை நிலை நிறுத்திய முருகன் ’என்று முள தென் தமிழின்’ தலைமைப் புலவனாகத் திகழ்கின்றான்; முத்தமிழால் வைதாரையும் வாழ்விக்கும் வித்தகனாய் விளங்குகின்றான்; திருமுருகாற்றுப்படை என்னும் சங்கத் தமிழ் மாலையும் பெற்று மிளிர்கின்றான். கந்தபுராணம் என்னும் காவியம் முருகன் திறத்தினை அழகுற எடுத்துரைக்கின்றது. கச்சியப்பரால் இயற்றப்பெற்ற அக் காவியம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை உடையது. சென்னைக் கந்த கோட்டத்தில் கந்தபுராண வகுப்பு நடத்தும் பேறு பத்தாண்டுகளுக்கு முன் எனக்குக் கிடைத்தது. அவ் வகுப்பிற்காகக் கந்த புராணத்தில் ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு பாடல்களைத் திரட்டிப் பொழிப்புரையுடன் மூன்று பகுதிகளாக வெளியிட்டேன். ’வேலின் வெற்றி’ என்னும் இவ்வுரை நடைநூல் கந்தபுராணத் திரட்டைத் தழுவி எழுந்ததாகும், முருகன் அருள் பெற்ற கச்சியப்பரின் சொல்லும் பொருளும் விரவி வருதலால் ’வேலின் வெற்றி’யும் மெய்யன்பர் கருத்திற்கு உகந்ததாகும் என்று எண்ணு கின்றேன். ’வேலுண்டு வினையில்லை' என்று நம்பி வாழும் நல்லார்க்கு இந்நூல் தமியேன் கையுறையாகும்.