Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
தற்காலத் தமிழுலகில் நல்ல பேச்சாளிகளுள் ஒருவரான திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் திருச்சி வானொலியில் பேசிய ஏழு பேச்சுக்கள் ஒன்றாக அச்சு ஏறித் தனிச் சிறு புத்தக வடிவில் வெளிவருகிறது. அதை வெளியிடும் சென்னைத் தமிழர் பதிப்பகத் தலைவர் எனக்கு முன்படி ஒன்றை அனுப்பி ஒரு முன்னுரை தருமாறு பணித்தனர். எல்லோரும் மதிக்கும் நல்ல சரக்குக்கு விளம்பரம் மிகை; நாடறிந்த நாவலர் விசுவநாதம் அவர்களின் இன்னுரைகளுக்கு என் முன்னுரை மிகை. கேட்டார்ப் பிணிக்கும் தகையவராய், கேளாரும் வேட்ப மொழியும் இந்நாவலர் பிறவியில் பேச்சாளி; சிறந்த எழுத்தாளர். நகைச்சுவை ததும்ப ஆழ்ந்த கருத்துக்களைக் கேட்பவர் அகத்தூன்றப் பேசி, இன்பமும் பயனும் ஒருங்கெய்த வைக்கும் திறம் நிறைந்தவர். பொருளற்ற சொல்லடுக்கும் புலவர் அல்லர். இகலாது வெல்லும் சொல்வல்ல வித்தகர். எளிமையும் இனிமையும், எண்ணாமல் எழுந்து பேசும் உரை களையும் மிளிரவைக்கும் சொல்லின் செல்வரான இவர், தமிழ் அறிஞர் தமக்கு விருந்தாகத் தயா ரித்துப் பேசும் 'வானொலி' உரைகள் தேனென இனிப்பதில் வியப்பிராதல்லவா? வெளிவரும் ஏழுரைகளையும் முன் வானொலியின் வாயிலாகக் கேட்டு மகிழ்ந்த எனக்கே மீண்டும் படிக்கத் தெவிட்டாமல் சுவை தந்தன என்றால், அவற்றை இப்புத்தகத்தில் முதல் முதலில் படிப்பவர்க்கு அவை உவகை தருவதில் ஐயமில்லை. கற்றாரும் முன்னறியாப் பல புதிய செய்திகளை இவற்றில் காணலாம். உளம் தளராமல் மேல்வரும் பொருளை உணர்ந்துவக்க ஆவலூட்டி, எதிர்பார்ப்பதிலும் அதிக இன்பம் உதவி, படிப்பவர்க்கு முடிவில் மேலும் பேசாமல் நிறுத்த நேர்ந்தமைக்கு வருத்தம் உறுத்தும் இன்னுரைகள் இவை.