Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இந்தப் புத்தகம் என்னுடைய ஐந்தாவது கதைத் தொகுதியாகும். இதற்குமுன் ’கலைஞன் தியாகம்'நீலமணி’, ’அறுந்த தந்தி’, ’கலைச்செல்வி, என்ற கதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. இதில் எட்டுக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுதியின் பின்னாலே ’கதைக்குக் கால் உண்டு’என்ற கட்டுரையைச் சேர்த்திருக்கிறேன். அதில் உள்ளவற்றை இந்த முன்னுரையிலேயே சேர்த்திருக்கலாம். ஆனாலும் கதை முழுவதையும் படித்த பிறகே அதில் கூறப் பெற்ற செய்திகள் நன்றாக விளங்கும். ஆதலால் பின்னே இருக்கட்டுமென்று முடிவு செய்தேன். அந்தக் கட்டுரை சுய புராணம் அன்று; கதையின் கதை. 'ஏன் மாமி, கண்ணன் புல்லாங்குழல் ஊதினால் புலியும் பசுவும் பக்கத்திலே பக்கத்திலே நின்று கேட்குமாமே! இந்தக் காலத்திலே மனிதர்களெல்லாம் அடித்துக் கொண்டு சாகிறார்களே. கண்ணன் இப்போது இந்த உலகத்தில் வந்து புல்லாங்குழல் ஊதினால் எல்லோரும் சாதுவாய்ப் போய்விட மாட்டார்களா?'அன்று கோகுலாஷ்டமியாகையால் தமிழ் வசனத்தில் உள்ள பாகவதத்தை நான் படித்துக்கொண்டிருந்தேன். தசம் ஸ்கந்தத்தில் கோபாலன் செய்த திருவிளையாடல்களைப் படித்துக் கொண்டே வந்தேன். பக்கத்தி லிருந்து அம்புஜம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் கேட்ட கேள்விதான் அது. குழந்தைப் பெண் ஆனாலும் அவளுக்குத் தெய்வ பக்தி அதிகம். கண்ணன் என்றால் அவளுக்குப் பிரியம். எங்காவது பாகவத உபந்நியாசம் நடந்தால் அவள் தன் பாட்டியுடன் போய்க் கேட்பாள். இந்தப் பழக்கத்தால் அவளுக்குக் கண்ணனுடைய கதைகளில் அநேகம் தெரியும். சில சமயங்களில் தான் கேட்ட கதையை அவள் சொல்லும் போது பார்க்க வேண்டும்.