Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
2002 குஜராத் படுகொலைகளின்போது நரோடா பாடியா என்னும் இடத்தில் மட்டும் 97 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்த டீஸ்டா செடல்வாடும் இதர தோழர்களும் கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கோரி வழக்கு நடத்தினர். அப்போதுகூட அந்தக் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வேண்டாம் எனும் கோரிக்கையையும் அவர்கள் சேர்த்தே முன்வைத்தனர். மானுடத்தை மதிப்பவர்கள் மனித கண்ணியத்தைக் குலைக்கும் மரண தண்டனையை ஏற்பதில்லை. மரண தண்டனைக்கு எதிரான இந்நூல் அது ஏன் கூடாது என்பதற்கு ஏராளமான தரவுகளைத் தருகிறது. 14 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தாங்கள் பதவியில் இருந்தபோது அளித்த மரண தண்டனைகளில் பல தவறாக அளிக்கப்பட்டன என்பதை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து விளக்கம் அளித்து மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என வேண்டிக்கொண்ட வரலாறும் இங்கு உண்டு. அப்படிச் சுட்டிக்காட்டப்பட்ட வழக்குகளில் இரண்டு பேர் ஏற்கனவே இறந்துபோய் இருந்தனர். அதனால்தான் திருப்பிச் சரிசெய்ய இயலாத மரண தண்டனை கூடாது என்கிறோம். ஒரே மாதிரி வழக்குகளில் வெவ்வேறு அமர்வுகள் வெவ்வேறு தீர்ப்புகள் அளித்த வரலாறுகளும் நிறைய உண்டு. அதனால்தான் மரண தண்டனையை ஒரு ’சாவு குலுக்கல் சீட்டு’ எனச் சொல்கிறோம். ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மரண தண்டனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மரண தண்டனை குறித்த விரிவான தகவல் தொகுப்பாக இந்நூல் அமைகிறது.