Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
பக்தன் ஒருவன் பதைக்கப் பதைக்க ஓடினான். அவன் கால்கள் தடுமாறின. வியர்வையால் மேனி குளமாயிற்று தலைமுடி அலங்கோலமாய் விரிந்து காற்றில் பறந்தது. நெற்றியிலே பூசியிருந்த திருநீறும், அதன் மேல் வைத்திருந்த அகலமான குங்குமப் பொட்டுங் கூட வியர்வையிலே கரைந்து ரத்தமும் சீழும் போல அவன் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தன. புரையோடி விட்ட புண்ணிலிருந்து கிளம்பிய துர்நாற்ற அருவிபோல் இருந்தது அந்தப் பக்தனின் முகக்காட்சி. தேவீ, தேவீ! காளிகா தேவீ!! என்று அலறல் வேறு.நல்ல இருட்டு. கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளம். அதன்மீது ஒரு மூங்கில் பாலம். அதிலே நிதானமின்றிப் பக்தன் ஓடினான். கரையோரத்துச் சுடலையிலே எரிந்துகொண்டிருந்த ஒரு பிணத்தை ஆற்றுத் தண்ணீர் இழுத்துக்கொண்டு வருகிறது. அதைப் பக்தன் பார்த்தான். 'லோக மாதா' என அலறிக் கொண்டே திரும்பினான். தீவட்டிகளோடு நாலைந்துபேர் வந்து கொண்டிருந்தனர். ஒருவன் கையிலே கொள்ளிச்சட்டி, பிணந்தூக்கிக்கொண்டு வந்தார்கள். இது ஆற்றிலே மிதக்கும் ஈரப்பிணமல்ல, புதிய பிணம். மூங்கில் பாலத்தில் பக்தன் நின்றான். ஒரே அமைதி. புதிய பிணம் எரிய ஆரம்பித்தது. அதன் சொந்தக்காரர்கள் பிரிந்து விட்டார்கள். இனி இது நெருப்புக்கோ, அல்லது ஆற்றில் தெரியும் வாளை மீனுக்கோ சொந்தம்.காலையில் சொந்தக்காரர்கள் உயிரோடிருந்தால் எலும்பு அள்ளிக் கொட்ட அங்கே வருவார்கள். அதற்குள் ஆறு அந்த வேலையைச் செய்தாலும் செய்துவிடும். பெருமூச்சு விட்டபடி மீண்டும் ஓட்டப் பயணத்தைத் தொடர்ந்தான் பக்தன். எதிரே சில தீவட்டிகள். பாடையல்ல! நீண்ட கழியில் ஒரு துணி ஏணை; அதிலே ஒரு குழந்தை விழிக்காத நித்திரை. கொள்ளிச் சட்டி கிடையாது. மண்வெட்டிகள் தூக்கி வந்தார்கள் சிலர். புதைக்கும் பிணம் போலும்!