Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
கண்ணன் சிறு பையன். அவனுக்கு வயது ஐந்து இருக்கும். அவனுடைய அப்பா, அம்மாவுக்கு அவன் ஒரே பையன். ஒரே பையன் என்றால் கேட்க வேண்டுமா? அம்மாவும் அப்பாவும் அவனை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்கள். கண்ணன் எது கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்து விடுவார்கள். ’இல்லை’ என்று சொல்லும் வழக்கம் அந்த அப்பா, அம்மாவிடம் இல்லவே இல்லை! கண்ணனுடைய வீட்டில் இந்தப் பக்கம் திரும்பினாலும் சரி; அந்தப் பக்கம் திரும்பினாலும் சரி; ஒரே பொம்மைகளாக இருக்கும்! சாவி கொடுத்தால் ஓடும் பொம்மைகளே அவற்றில் பாதிக்கு மேல் இருந்தன! அவன் எந்தப் பட்சணம் வேண்டுமென்று கேட்டாலும், உடனே அவனுடைய அம்மா செய்து கொடுத்து விடுவாள். வீட்டிலே செய்ய முடியாவிட்டால், கடையிலே அவன் அப்பா வாங்கி வந்து கொடுப்பார். கண்ணனுடைய மனம் கோணாதபடி அவர்கள் நடந்து வந்தார்கள். இவ்வளவு செல்லமாக வளர்த்துங்கூட, அவனுக்கு ஒரே ஒரு குறை மட்டும் இருந்தது. அது என்ன குறை என்றா கேட்கிறீர்கள்? கண்ணனுக்குப் பாட்டி இல்லை. பாட்டி இல்லையே என்று அவன் கவலைப்பட்டான். அந்தக் கவலை அவனுக்கு எப்பொழுது ஏற்பட்டது தெரியுமா? கண்ணன் வீட்டுக்கு மூன்றாவது வீட்டில், ராஜம் என்று ஒரு சிறு பெண் இருந்தாள். அந்த ராஜத்துக்கும் கிட்டத்தட்டக் கண்ணன் வயது தான். இருவரும் மிகப் பிரியமாக இருந்தார்கள்; சேர்ந்தே விளையாடுவார்கள்; சேர்ந்தே பள்ளிக்கூடத்துக்குப் போவார்கள்; முதல் வகுப்பிலே இருவரும் படித்து வந்தார்கள். ஒருநாள், ராஜமும் கண்ணனும் பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜம் கண்ணனைப் பார்த்து, 'கண்ணா, எனக்கு ஒரு நல்ல கதை தெரியுமே! சொல்லட்டுமா?' என்று கேட்டாள்.